வியாழன், 29 ஜூலை, 2010

மகிழ்ந்த காலம்

தெத்தூர் . மதுரைக்கு அருகிலுள்ள  மலைகள் சூழ்ந்த கிராமம். பெரும்பான்மையாக ஆதிக்க சாதியினரும் சிறிதளவு ஒடுக்கப்பட்டவர்களும் வாழும் சிற்றூர். விவசாய வாய்ப்பில்லாமலும் , வேறு வழியில்லாமலும் ஒடுக்கப் பட்ட மக்கள் மதுரை போன்ற நகரங்களைச் சார்ந்தே வாழும் சூழல். இரண்டு மாதங்களுக்கு முன்னர் மதுரையிலுள்ள பழைய திரையரங்குக் கட்டிடத்தை உடைக்கும் வேலை செய்தபோது சுவர் இடிந்து விழுந்து தெத்தூரைச் சார்ந்த பாண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். அவர் தவிக்க விட்டுச் சென்ற நான்கு பிள்ளைகளில் மூத்தவள் தந்தையின் நினைவிலேயே கடந்த மாதம் இறந்துவிட்டாள். பொருளாதார சூழலும் இரு பிள்ளைகளை பள்ளிக்குச் செல்லவிடாமல் செய்துவிட்டது. இவ்வாறு , தொடர்ந்து வந்த இழப்புக்களால் துவண்டுபோன குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னபோது மகிழ்ந்தார்கள்..அவர்களின் சிறு மகிழ்ச்சியில் நான் பேரு மகிழ்ச்சியடைந்தேன்..அம்மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்களுடன் எடுத்துக் கொண்ட படம்.

சனி, 24 ஜூலை, 2010

செருப்புச் சமூகம்


புதிய செருப்புகளாய் விரிக்கப்பட்டிருக்கின்றன  
அன்றாட கஞ்சிக்கான எதிர்பார்ப்புகள் 
கடந்து செல்வோரின் பாதங்களோடு 
சென்று விடுகின்றன நம்பிக்கைகள்
கனரக வாகனங்கள் செல்லும் 
சாலைகளில் நசுங்கி கிடக்கிறது 
வாழ்க்கை 
திரும்பிக் கூட பார்க்காமல் செல்லும் 
முகங்களில் தெரிகிறது 
பணக்காரர்களுக்கு மட்டுமேயான 
இந்தச் சமூகம் 

சனி, 17 ஜூலை, 2010

வறுமையின் செய்தி

வறுமையின் செய்தி 






 நான் குடிக்கும் கம்பங் கூழ்
கலயத்தின் அருகில் இருக்கிறது
வறுமை
அது உண்டாக்கும் கோபத்தைவிட
 இயல்பாய் வரும் எம் புன்னகையில்
காத்திருக்கிறது
 உங்களுக்கான அதிர்ச்சி 

வெள்ளி, 16 ஜூலை, 2010

எதிர்காலங்களுடன் நான்

மூகத்திலும் பொருளாதாரத்திலும் விளிம்பு நிலையிலுள்ள எதிர்காலங்களுடன் நான். புறக்கணிக்கும் மனிதர்களையே கண்டு விரக்தியான கண்களுடன், குழந்தைமைகூட இல்லாமல் கனத்த மனதுடன் இருந்தவர்களுடன் அன்பாக பேசியபோது கைகளை இறுகப் பற்றி மிகவும் மகிழ்ந்த குழந்தைகளுடன், நானும் கிடைத்தற்கரிய மகிழ்ச்சி மனதெல்லாம் பொங்க இருந்த காட்சி அது.

வியாழன், 15 ஜூலை, 2010

தொல்லைக் காட்சிகள்

தொல்லைக் காட்சிகள் -தமிழ் முதல்வன் 

                 னியுடமைச் சிந்தனையை உள்வாங்கியபோது  சிதறிப் போனது மானுடக் கூட்டம். குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், பொதுமைச் சமூகத்தில் கூட்டாக வாழ்ந்ததன் எஞ்சிய அடையாளமாய் இருந்த கூட்டுக் குடும்பங்கள் , இன்று நம்மிடையே இல்லாமல்  போய்விட்டன. வளர்ந்து வரும் உலக, தாராளமயங்களின் நெருக்குதல்களால் நமது வாழ்வியல் கட்டுமானங்களை இழந்து விட்டோம்; வேலை வாய்ப்புகள், விவசாய சாகுபடி வாய்ப்புகள் ஆகியவற்றையும்  இழந்துவிட்டோம். மேலும், வளர்ந்து வரும் நவீன அறிவியல் ஈன்றுபோட்ட  தொலைக் காட்சிப் பெட்டிகளால்  நமது கூட்டு வாழ்முறைகளையும் இழந்து விட்டோம்.
                  நடைமுறையில் காணும் உண்மையான உலகைவிட, மிகைப்படுத்தப்பட்ட  நடைமுறைகளை ஊடகங்களின் கற்பனைப் பிம்பங்கள் வழியாக உற்பத்தி பண்ணும் போலியான உலகம்தான் இன்றைக்கு மனிதர் நடமாடும் வாழ்விடமாக கட்டமைக்கப் படுகிறது. மனவெளியில் திணிக்கப்படுகின்ற  கற்பனைப் பிம்பங்களை மெய்யாக உணரும்  களிமண் நிலைக்கு மானுடத்தைத் தள்ளுகின்ற வல்லாதிக்க அரசுகளின் உந்துகோளாய்  ஊடகங்கள் மாறிப்போயுள்ளன. முதலாளிகளும் அரசியல்வாதிகளும் இணைந்து பின்னி இறுகியுள்ள வலைகளில் ஊடகங்கள் எளிதில் மாட்டிக்கொண்டு மக்கள் மனதை ஊனமாக்கும் கதிர்வீச்சை உமிழ்கின்றன. வீரியமிக்க அவ்வீசுகளை மென்மையாக உணர்ந்து சுகம் கொள்ளும் மக்கள் மெல்ல மெல்ல மாக்களாக (விலங்குகளாக) உளஉருமாற்றம்  செய்யப்படுகிறார்கள்.  தொடர்ச்சியான தொலைகாட்சி அலைவரிசைகளில் சிக்கிச் சீரழியும் மக்களை ( குறிப்பாக நமது பெண்களை ) ஒரு பொழுது மீட்டாலும் வலையில் சிக்கிய மீன்களாய் துடித்துத் துவண்டு போய்விடுகிறார்கள்.
                    ஆண் பெண் தோற்றங்களில் நிகழும் இயற்கையான பாலினக் கவர்ச்சிகளைக் கூட   மிகைப்படுத்தி கொச்சையாகக் காட்டுவதன்மூலம் பெற்றோர் x பிள்ளைகள், சகோதர x சகோதரிகள் போன்ற இன்னும் பல உறவுகளில் தேவையற்ற மனக்குறுக்கத்தை  ஏற்படுத்தி உறவுமுறைகளை சிதைப்பது போன்றவற்றைச் செய்கிறது இன்றைய ஊடகங்கள். அதன்மூலம் குடும்ப ஆளுமைகளைச்  சிதைத்து  சமூக மனநிலையிலிருந்து உதிரிமனநிலைக்கு இட்டுச் செல்லும் பயங்கரவாதச் செயல்களையும்  தொலைக்காட்சிகள் செம்மையாகச் செய்துவருகின்றன. பொறுப்பற்ற எல்லாச் செயல்களையும் செய்வதான ஒரு பிம்பத்தை உருவாக்கி, தான்தோன்றித்தனமான  மனநிலையில் தோய்த்து, கற்பனைகளின் எல்லை தாண்டியும் கொண்டுபோய் ஆண்டுக் கணக்கில் ஆட்டம்போட்டு  மக்களை அலற வைத்துக் கொண்டிருக்கும் தொடர்களுக்கு மாற்றாக, உண்மைத் தன்மையான நிகழ்வுகளை, மாந்தர்களை, வாழ்க்கையினை சொல்லும் வண்ணமாக ஒரு தொடர்களையும் தொலைக்காட்சிகள் வழங்குவதில்லை.
                  பெரும்பாலான வாழ்க்கையின் காலங்களை ஊடகங்களே சூழ்ந்துவிட்ட சூழலில், ஊடக வழியிலேயே பெரும்பான்மையோரின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.  பள்ளி நேரம்போக துள்ளிவிளையாடும் எள்ளளவு காலங்களையும் கொள்ளைகொண்டுவிட்டன தொலைக்காட்சிப் பெட்டிகள்.  தொலைக்காட்சியின் தொல்லையில்லா காலங்களில், நிலவைப் பார்த்துக் கொண்டே பெரியவர்கள் சொல்லும் கதைகளில் உலாவந்த சிறார்கள் , கதைகளில் வரும் பாத்திரங்களையும், சூழல்களையும் உள்ளங்களில் உருவகம் செய்து, கதையாடல் வழியே சென்று, கதைக் களத்திலுள்ள பாத்திரங்களை  தன் மழலைப் போக்கில் வழிநடத்தி, புதியதொரு கதையை உருவாக்கும் கற்பனைவளமும், படைப்பாற்றலும் பெற்றிருந்தார்கள். இப்பொழுதெல்லாம் இத்தகைய திறமைகளின்றி தொலைக்காட்சிகளின் மாயவித்தைகளில் வியந்து, மயங்கி தன் கற்பனை - படைப்பு, சிந்தனை உள்ளிட்ட அத்தனை ஆற்றல்களையும் இழந்து  வெறும் வேடிக்கை மனிதராகவே வளரும் அவலநிலையை இன்றையத் தொலைக்காட்சிகள் ஏற்படுத்திவிட்டன.
                      இங்கே சிந்தனைத் தளம்கட்ட வாய்ப்பில்லாமல் போனதால், தொலைகாட்சி நாயகர்களின் மாயச் செயல்களை தானும் செய்ய முற்பட்டு, எத்தனையோ குழந்தைகள் தங்களின் வாழ்வை அத்தனை சீக்கிரம் முடித்துக்கொண்டன. ஓடித்தாவி, கைகோர்த்து, கட்டிபிடித்து, கண்டுபிடித்து, கூட்டாக மகிழ்ந்து உடலும் உள்ளமும் ஆற ஆடிய விளையாட்டுகள் மறைந்து,  இறுக்கமான மனநிலையுடன் இன்று தனிமைப்பட்டு தொலைக்காட்சிப்பெட்டிக்குள் முடங்கிவிட்டனர் குழந்தைகள்.அதிலும் குறிப்பாக அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தபின்னர் கிராமக் குழந்தைகளின் நிலை கல்வியிலும், காலத்திற்குத் தகுந்த ஊட்டதிலும்,சமூக சூழலிலும் மிக மோசமாக உள்ளது. ழான் பொத்ரியார் அவர்களின்  மொழியில் , ஓர் உலோக அடைப்பனுக்குள் வான் வெளியில் மிதக்கும் ஒரு நிலையில்தான் இன்றைய சிற்றூர் மக்கள்  இருத்திவைக்கப் படுகிறார்கள். இதை முதலில் வெளிச்சப்படுத்தினால்தான் குழந்தைகளின் வழமையான எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்.
                    பல்வேறு நோயூக்கிகள்  சூழ்ந்துள்ள மிகவும் ஆபத்தான உலக நிலைமைகளில்  எதிர்ப்பாற்றல்மிக்க குழந்தைகளை உருவாக்கும், அமுதம் போன்ற தாய்ப்பால் சுரக்கும் மழலைகளுக்கான  மார்பகங்களை, இன்றையப் பெண்கள் எதிர்பாலினத்தவரை சுண்டியிழுக்கும் கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தும் போக்குக்கு ஊடகங்களே முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன.  தாலாட்டும் பாட்டுக்களை தாய் வீட்டோடு விட்டுவிட்டு  குறுந்தகடும் ஒலிபெருக்கியும் சீதனமாக் ஏந்திவரும் நவீன காலப் பெண்கள் குழந்தையை உருவாக்கும் இயந்திரங்களாக மட்டுமே ஆகிவிட்ட சூழலில், தாய்ப்பால் கொடுப்பதுகூட தன் இளமைக்குப் பாழ் என்று பால்சுரப்பிகளை ஊசிபோட்டுக் கட்டுப்படுத்தி, பிள்ளைகளை பிராய்லர்  கோழிகளாக வளர்க்கின்ற இன்றைய நிலைமைகள்  குழந்தைகளின் எதிர்காலத்தின் மேல் சொல்லொணா துயரத் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றன. விளம்பரப்படுத்துகிற செயற்கை உணவுகளை பெட்டிபெட்டியாக  கொட்டிக் கரைத்துப் புகட்டுகின்ற புட்டிகளைக் கூட குழந்தைகளின்  கையில் கொடுத்துவிட்டு அந்தப்புரத்துப் பெண்களாய் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குள் தொலைந்துவிடுகின்றனர்.  மொழியினைக் கற்றுக்கொடுக்கும் தாயிடமே, தன்னுடைய தாய்மொழியை அறியமுடியாத ஆபத்தான சூழலையும், தூய தமிழின் வங்கி போன்ற சிற்றூர் மக்கள்கூட தொடர்ச்சியாக நான்கு தமிழ்வார்த்தைகளைப்  பேசிவிட்டால் தாழ்வுமனப்பானமை கொள்ளும் மிகமிக ஆபத்தான சூழலையும், இன்றைய  ஊடகங்கள் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்துவிட்டன.
               தன்னைத் தானே உணர முடியாத அயல்வெளியில் மக்கள் தூக்கிஎறியப்பட்டுவிட்டநிலையைப் பயன்படுத்தி , மொழி , இனம், பண்பாட்டு அழித்தொழிப்பு வேலைகளை தீவிரமாக, பயங்கரமாக, மறைமுகமாக செய்துவருகின்றன இன்றைய ஊடகங்கள்.   தமிழைப் பேசாவிட்டாலும் குற்றமில்லை, பலமொழிகளை ஒன்றாகக் கலந்து ஒரே நேரத்தில் கொட்டித் தீர்க்கும் வாயாடிகளைக்(தொகுப்பாளர்கள்) கொண்டு தமிழை தமிழரிடத்திலேயே அறியாவண்ணம் காவுகொள்கின்றன.  பாடப் புத்தகங்களோடு சரி, தமிழ் ஆசிரியர்களும் பிறமொழிக் கலப்பின்றி பேசமறுக்கும் இறுக்கம் நிறைந்துள்ள, தமிழை முற்றிலும் புறக்கணிக்கின்ற வசதிமிக்க பெரும் கல்விக்கூடங்கள் நிறைந்துள்ள சூழல்களுக்கு  ஊடகங்கள் துணையும் நிற்கின்றன. மேலும், அரசுத் தொடர்புகளிலும், வெளியீடுகளிலும் கூட  வேறுமொழி புகுத்தப்பட்டுள்ள அவலநிலையை உருவாக்கிவரும் அரசுகளும் இதற்கு முழுப் பொறுப்பாகின்றன.
                 வெறும் இனக் கவர்ச்சி மட்டுமே தகுதியாகக் கொண்ட தொகுப்பாளர்களையே மூலதனமாக்கி நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சிகள், விடுப்பு நாட்களில் நடிக நடிகையரை வீட்டிற்குள் கூட்டிவந்து அவர்களின் தான்தோன்றித் தனமான நடப்புகளைப் பெருமையாகச் சொல்லவைத்து , அதுவும் தமிழை பேசத் தெரியாமல் உளறுவதே புகழ்சிமிக்க ஒன்றாகக் காட்டி நினைக்கவைத்து, அவர்களையே வாழ்க்கையின் மாதிரிகளாகவும், அவர்கள் சொல்வதே வாழ்வின் இலக்காகவும் கொள்ளுகின்ற நிலையை ஊடகங்கள் செய்து வருகின்ற வேளையில் விடுப்பு நாட்கள் கெடுப்பு நாட்களாக மாறிவிட்டன.
                      'குலுக்கல்' பாடல்களையும், உடலுறுப்புகளை, உடல்மொழிகளை, உடலின் நிறத்தை இழிவாகப் பேசி வெகுமக்களின் ஆளுமையைச் சிதைக்கும் நகைச் சுவையென்ற பெயரிலான நச்சுச்சுவைக் காட்சிகளையும்,   வீட்டுக்குள் திணிக்கின்றன ஊடகங்கள். மேலும், வெறுக்கப்படுகின்ற வில்லன் பாத்திரங்களுக்கு இனிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மோசடி செய்கின்ற, காதலிப்பது மட்டுமே இளைஞர்களுக்கு இலக்காகச் சொல்லிக் கொடுக்கின்ற, சாதிமேலாண்மை செய்கின்ற கதாநாயகர்களையே போற்றி சாதியை நிலைநிறுத்துகின்ற , புனைவான பாத்திரங்களின்வழி மக்களின் மன மாற்றங்களைத் தடுக்கின்ற திரைப்படங்களையே நம்பி பிழைப்பு ஓட்டும் தொலைக்காட்சிகள், மக்களுடைய சிந்தனைத் திறத்தின் மேல் பெரும் வன்முறையே செய்துவருகின்றன.
                     ஒளிபரப்பும்  உரிமையைப் பெற்றுக் கொண்டவர்கள், நிகழ்ச்சியைவிட  விளம்பரத்திற்கே அதிக முன்னுரிமை அளிக்கின்ற நிலையில் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறார்கள். ஒரு மட்டை விளையாட்டின் போது(கிரிக்கெட்), ஓட்டங்கள் எடுத்து ஓடிவந்துகொண்டிருந்த இந்திய அணித் தலைவரின் கையில் எறியப்பட்ட பந்து அவரை துடிக்க வைத்தது. அப்பொழுது அவரின் நிலையைக் காட்டுவதற்குப் பதிலாக விளம்பரங்களையே காட்டி அவரின் துன்ப நிலையை மறைத்திட்டனர். இவ்வாறு முக்கிய நிகழ்வுகளிலும், செய்திகள்  போன்ற கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய இடங்களிலும் விளம்பர இடைவெளிகளை  உண்டுபண்ணி கவனச்சிதறல்களை ஏற்படுத்துகின்றனர். மேலும், இப்பொழுதெல்லாம் செய்திகளை விளம்பர நிறுவனங்களே வழங்கும் நிலையில் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டும், திரித்துவிடப்பட்டும் உண்மைகள் மக்களிடத்தில் மறைக்கப்படுகின்றன.
                  மேலும், விளம்பரங்கள் பெண்களை மிகவும் இழிவுபடுத்துவதாக அமைகின்றன. வீட்டில் பூசியிருக்கும் வண்ணத்தைக் கண்டு மயங்கிய பெண் அந்த வீட்டுக்கு மருமகளாக விரும்புகிறாள். ஆனால், அந்தவீட்டு பையன் பத்து வயது சிறுவனாக இருந்த போதிலும் அவன் வளரும்வரை காத்திருக்கவும் துணிவதாக ஒரு விளம்பரம் வந்து , பெண்கள் பகட்டுகளுக்கு எளிதில் மயங்கும் தன்மையுடையவர்களாகவும், அதனால் வாழ்க்கையையே ஈகம் செய்யக் கூடியவர்களாகவும் காட்டப்படுகின்றனர்.  இதைவிடவும் கேவலமாக, ஒரு மிட்டாயை பல ஆண்கள் ஒரு பெண்ணிடம் கொடுக்க, அதை சுவைத்தவுடன் சுவையில் மயங்கி அத்தனை ஆண்களுடனும் உறவுகொள்ள ஒப்புக் கொல்லுவதைப் போல ஒரு விளம்பரம் வந்து, பெண்கள் சிறு காரணத்தினாலும் எளிதில் தன்வயப்பட்டுவிடக் கூடிய மனநிலையை உருவாக்குகிறது. இன்னொரு விளம்பரத்தில், ஒரு ரொட்டி நிறுவனம் ஐம்பது பைசாதள்ளுபடி தருகிறது என்ற செய்தி காதில் பட்டவுடன் மருத்துவர்களாலேயே கைவிடப்பட்ட ஒரு பெண் காப்பாற்றப்படுகிறாள். இப்படியாக பொருளாசை, சுயநலம், போட்டி போன்றவைதான் பெண்களின் குணம் என்றவாறு விளம்பரங்கள் ஒரு மனநிலையை கட்டமைக்கிறது.
                     விளம்பரங்களின்மூலம் சரக்குகளில் ஏற்றப்படும் கவர்ச்சியானது, பொருளின் பயன்பாட்டு மதிப்பீட்டிற்கும் மேலாகவே தவறான மோகத்தை திணிக்கிறது. சரக்கையும், அதன்மீது உருவாக்கப்படும் கவர்ச்சியும்  இணைவதை காரல்மார்க்ஸ் கடுமையாக எதிர்த்தார். முதலாளித்துவ சமூகம், ஒரு பொருளை உற்பத்தி செய்யும் முன்னரே விளம்பரங்களின்மூலம் அந்தப் பொருளைத் தேடும் மனநிலையை உற்பத்தி செய்கிறது. வாங்கும் ஆவலை மக்களிடத்தில் அவர்களையறியாமலே ஏற்படுத்திவிடுகிறது. ஒரு பொருளை நாம் உணர்வதில்லை; உணர விடுவதுமில்லை. அதிகார ஊடகங்கள் , நாம் எப்படி உணர வேண்டுமென்று விரும்புகிறதோ , அதன்படிதான் நாம் அந்தப் பொருளை உணர்கிறோம். ஆக,  நாம் உணர்வது அந்தப் பொருளையல்ல; அதுகுறித்து ஊடகங்கள் புனைந்துள்ள போலிமைகளைத்தான். விளைவு, நம்முடைய ஒட்டுமொத்த வாழ்வே போலியாகிவிடுகிறது. இதனால், நனவிலி மனதில் பேரச்சம் பெருகி , மனிதர்களுக்குரிய படைப்பு மனத்தை இழந்து யாருடைய கையிலோ நம்மை இய்க்கும் பொத்தனை கொடுத்துவிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப நடமாடும் இயந்திரமாகி விடுகிறோம் என்கிற ழான் பொத்ரியாரின் எழுத்துக்களின் வழியே மீண்டும் பயணிக்கும்போது, விளம்பரமே அனைத்தையும் முடிவுசெய்யும் அளவுகோலாக உள்ள சூழலில்தான்  நாம் வாழ்கிறோம் என்பது தெளிவாகிறது.
                         இவ்வாறு நாம் விரும்பாமலே நம்மைச் சூழ்ந்து தாக்கும் தொலைக்காட்சிகள் மிகப் பெரும் தொல்லைக் காட்சிகளாக மாறிவிட்டன.  அவைகளிலிருந்து விடுபட மக்களே தயாரிக்கும் மக்களுக்கான குறும்படம், ஆவணப்படம் போன்றவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு மக்கள் திரைப்படக் கழகம் என்றென்றும் துணை நிற்கும்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

தொடரும் ஏமாற்றங்கள்

தொடரும் ஏமாற்றங்கள் - தமிழ் முதல்வன்.
                            மாற்றங்கள் பலவகையுண்டு. பிறரால் நிகழ்வது, நம்மால் நிகழ்வது, காலத்தால் நிகழ்வது என்றவாறு அவை  அமைகின்றன. அன்பு, ஆறுதல், உதவி, என விரியும் நம் எதிர்பார்ப்புகள்  குழந்தை, பெற்றோர், மனைவி, சகோதரர், நண்பர் என விரியும் பிறரிடம் கிடைக்காதபோதும், பிறரின்பால் நாம் கொண்டுள்ள திட்டங்கள் நிறைவேறாதபோதும் வரும் ஏமாற்றங்கள் ஒரு வகை. வாழ்வில் நம்மையறியாமலேயே கடந்துகொண்டிருக்கிற நமக்கான அறிவு, வாய்ப்புகள் போன்றவை தெரியவரும்போதும் அது காலத்தால் நிகழும் ஏமாற்றங்கள்.  நாம் கொண்டுள்ள திட்டங்களை முடிக்க நம்மாலே இயலாத் நிலைவரும்போது நிகழும் ஏமாற்றங்கள் நம்மால் விளைந்த ஏமாற்றங்கள்  என இதை விரித்துக் கொண்டே போகலாம்.
                                 இவைகளில் நான் நாள்தோறும் ஏமாறுவது காலத்திடம்தான்.ஒருவகையில் அது என் இயலாமையால் நிகழ்வது என்றுகூடச் சொல்லலாம். வீட்டில் என்னைச் சுற்றி எப்பொழுதும்  புத்தகங்கள், இதழ்கள்  என்றவாறுதான்  சூழ்ந்து கிடக்கும். அதில், இன்று படித்து முடித்துவிடவேண்டும் என்று நான் போடுகிற தீர்மானங்கள் நிறைவேறாத போதுதான் ஏமாற்றங்கள் நிகழும். பல வாசிப்பு வீரர்கள் உட்கார்ந்த நிலையிலேயே முன்னூறு  பக்கங்களை முடித்துவிட்டுதான் எழுந்திருக்கிறார்கள். அதை நானும் செய்யமுடியும். ஆனால் கிரகிக்க வேண்டுமே.
                                ஒரு அமர்வில் நூறு பக்கத்தை மட்டுமே என்னால் வாசிக்க முடிகிறது.அதற்கான நேரமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகிறது. இதனால், கடவுள் நம்பிக்கை இல்லையெனினும்  விஜயகுமாரன் சொன்னதுபோல் இயலாமைகள் நம்மை நமக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு ஆற்றலை நோக்கி ஈர்க்கிறது. அந்த ஆற்றலே கடவுள் நம்பிக்கையின்பால் இழுத்துச் செல்கிறது. அப்படிதான், புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவையெல்லாவற்றையும் படித்து முடித்துவிட வேண்டுமென்ற ஆர்வம், ஆவல் என்னை, என்னைமீறிய ஆற்றலை நோக்கிச் செலுத்துகிறது.
                                 இது நாள்தோறும் நிகழும் ஏமாற்றம் என்றால் மாதந்தோறும் ஒரு ஏமாற்றம் நிகழ்கிறது. அது இதழ்கள் மூலம் வருபவை. உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, தமிழினி, புதிய ஜனநாயகம்-கலாசாரம், உழைக்கும் மக்கள் தமிழ்தேசம், தென்செய்திகள், புது விசை... என விரியும் இதழ்கள் மாதந்தோறும் முன்னூறு ரூபாயைப்  பிடித்து விடுகின்றன.. ஆனால், அனைத்திலுமுள்ள கட்டுரைகளையும், படைப்புகளையும் படிக்க முடிவதில்லை. இதனால் வரும் ஏமாற்றம் அதிகம்.
                                  இதுபோக புத்தகக் கடைக்குப் போனாலா, புத்தகக் கண்காட்சிக்குப் போனாலோ  ஒரு ஏமாற்றம் வரும். அது இவையெல்லாவற்றையும் விஞ்சிவிடும். ஏராளமான புத்தகங்கள் இருக்கும். பார்ப்பேன். புரட்டுவேன். உடனே வாங்க வேண்டும்போல இருக்கும். விலையைப் பார்ப்பேன். ஏமாற்றம். கையில் காசு வேண்டுமில்லையா. அனைத்துக் கடைகளுக்கும் சென்று வாங்க ஏங்கி, ஏமாந்து அக் கண்காட்சியைவிட்டு வெளியேறும்போது கைகளில் ஓரிரண்டு புத்தகங்கள் மட்டுமே ஆறுதல் தரும். மற்ற அனைத்துப் புத்தகங்களும், எங்களைத் தவிக்கவிட்டுச் செல்கிறாயே என ஏங்கிக் கொண்டிருக்க அவைகளை நான் தவிக்கவிட்டு வந்துவிடுவேன்.
                            ஆனால் அண்மையில் நிறைவு ஏற்படுவதாக ஒரு சூழல் அமைந்தது.உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குச் செல்வதற்கு கையில் காசு இல்லாமல் இருந்தேன். தக்க நேரத்தில் அண்ணன்  சிவகுமார் அவர்களின் உதவி தென்னாப்பிரிக்காவிலிருந்து  கிடைத்தது. கோவை மாநாட்டின் எதிர்புறம் நடந்த புத்தகச் சந்தையில் குடும்பத்தோடு சென்று மூவாயிரம் ரூபாயிக்கும் மேலாக புத்தகங்கள் வாங்க முடிந்தது.  எந்தக் கண்காட்சியிலும் ஐநூறு ரூபாய்க்கும் மேலாக புத்தகங்களை வாங்கியதில்லை என்ற நிலையில் இந்த அளவுக்கு வாங்கப் பெற்றதில் மகிழ்ச்சியில் திளைத்தேன். குழந்தைகளைப் போன்று புத்தகங்களை தூக்கி சுமந்துகொண்டு வந்தேன். சந்தையின் வெளிவாயிலின் அருகில் அஜயன் பாலா அவருடைய புத்தகங்களோடு நின்றிருந்தார். அவரிடம் பேசமட்டுமே முடிந்தது. புத்தகம் வாங்கக் காசில்லை. வாங்கிய புத்தகங்களின் வழியே  அண்ணன் சிவகுமார் அவர்கள்  பக்கத்திலேயே இருந்துகொண்டிருக்கிறார். ஆனால், அங்கு  என்னுடைய கவிதைகளையும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை வாசிக்கும் ஆய்வரங்குக்குள் என்னால் செல்லமுடியாமல் போய்விட்டது. எந்தக் கவிதைப் புத்தகம் உள்ளே வாசிக்கப் பட்டதோ அதே கவிதைப் புத்தகம் என்னை உள்ளே செல்லவிடாமல் செய்து விட்டது. புத்தகத்தின் தலைப்பில் 'ஆயுதம்' இருந்ததால் காவலர்கள் பயந்து விட்டார்கள். அந்தப் புத்தகம்  கையில் இருந்ததால்  என்னை விசாரணையின் பேரில் வருத்தி விட்டார்கள். இதைப் பதிவு செய்த கல்கி இதழுக்கும் திலகபாமாவுக்கும் நன்றிகள். இவ்வாறாக அங்கு ஏமாற்றம்.
                                         இதில் இன்னொரு பெரிய ஏமாற்றம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. வாசிக்கும் எழுத்துக்களின் மூலம் பிறக்கும் புதிய சிந்தனைகளை உடனே எழுதமுடியவில்லை. விட்டு விட்டுப் பிறக்கும் சிந்தனைகளைத் தொகுக்க முடியவில்லை. தோன்றி மறைந்துகொண்டேயிருக்கின்றன. எழுத உட்கார்ந்தால் படிக்கத் தோன்றுகிறது. படித்துக் கொண்டிருக்கும்போது எழுதுவதற்கான சிந்தனை பிறக்கிறது. இப்படியாக, சிந்தனைஎல்லாவற்றையும்  எழுதமுடியவில்லை என்பது ஏமாற்றமாயிருக்கிறது.
                                         இவை எல்லாவற்றையும் விட ஒரு பெரிய ஏமாற்றம் எனக்குள்ளும், என்னால் இந்த சமூகத்திற்கும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. அது என் எழுத்துக்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தையும் விளைவிக்கவில்லை என்பதுதான்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

அழிக்கப்படும் உலகங்கள்



ன் எலும்புகள் ஓடிய
நான் சுமக்கும் புத்தக மூட்டையைவிட
என்னை அழுத்தி வருத்தும்
உங்கள் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்
என் உலகத்தை தின்றுவிடுகின்றன.
பிறரின் உலகத்தை மகிழ்வித்து
பொம்மையாக்கப்பட்ட நான் இயந்திரமாகிறேன்.
அழிக்கப்பட்ட உலகத்தைத் தேடும் இயந்திரங்கள்
அழிவுக்கானதாயும் மாறலாம்
அப்பொழுது குழந்தை உள்ளங்களைத் தேடாதீர்
அப்பாவே அம்மாவே.

புதன், 7 ஜூலை, 2010

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்-குறிப்புகள்

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்
-தமிழ் முதல்வன்

                 சாதி எனும் பெயரில் சக மனிதர்களை விலங்குகளாக நடத்திய கேடுகெட்ட சமூகத்தைத் திருத்த, ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் சமூகத்திலிருந்து தோன்றியவர் தத்தா ரெட்டைமலை சீனிவாசன். செங்கல் பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் கோழியாளம் எனும் கிராமத்தில் 7.7.1859 ஆம் ஆண்டு பிறந்தார். கோழியாளம் மதுராந்தகத்திற்கு வடமேற்கே சுமார் பதிமூன்று கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. இவர் பெயரிலுள்ள ரெட்டைமலை  எனும் ஒட்டு அவரது தந்தையின் பெயராக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. பின்னர் இவரது குடும்பம் தஞ்சை மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தபோது அங்கு உயர் கல்வியை முடித்தவர், அதன்பின்னர்  கோவையில் அரசினர் கலைக் கல்லூரியில் படிப்பினைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பி.ஏ. பட்டதாரியாக பெருமைகொண்டார். இங்கு கல்வி பயிலும் காலத்தில் அறிஞர் அயோத்திதாச பண்டிதரின் வீட்டில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் அயோத்திதாசப் பண்டிதரின் மைத்துனன் ஆவார்.  1887  ஆம் ஆண்டு ரெங்க நாயகி அம்மையாரை மணந்தவர் ஊட்டியில் ஒரு நிறுவனத்தில் பத்தாண்டுகள் கணக்கராக பணிபுரிந்தார்.
                       தலித் சமூகத்தின் துயரத்தைத் தொடர்ந்து கண்டவர், தம் சமூகத்தின் துயரங்களை நீக்க பணியிலிருந்து விலகி 1890 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். தென்னிந்தியா முழுவதும் சென்று ஒடுக்கப் பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிந்த  அவர், சாதியிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான வழியைக் காணும் ஆய்வில் இறங்கினார்.  சமத்துவ சமூகம் அமைப்பதற்கான தரவுகளை கல்வெட்டுகளிலிருந்தும், வரலாற்று நூல்களிலிருந்தும், அரசுக் குறிப்பேடுகளிலிருந்தும்  தேடினார். தானடைந்த அறிவுகளை 1893  ஆம் ஆண்டு தொடங்கிய 'பறையன்' என்ற இதழ் மூலம் வெளிப்படுத்தினார். அவரின் பத்திரிகை அந்நாளில் அச்சிட்ட உடனேயே வெகுவாக விற்றுத் தீர்ந்தது. இந்திய கடந்து அயல் நாடுகளிலும் அதற்கு வாசகர்கள் பெருகியிருந்தனர். பத்திரிகையாளராக மட்டும் இருந்திடாமல் மக்களை திரட்டி அமைப்பாக்கினார். 1891 ஆம் ஆண்டு பத்திரிகை தொடங்கும் முன்னரே 'பறையர்மகாஜன சபை ' என்ற அமைப்பை தொடங்கி சாதிக் கொடுமையை எதிர்த்து மக்களை அணியமாக்கினார்.பல போராட்டங்களை நடத்தினார்.
                          'பறையர் மகாஜன சபை' மூலம் அக்காலத்திலேயே மாநாடு நடத்தி தலித் மக்களின் உரிமைகள் குறித்துப் பேசினார். இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்கள், கூட்டங்கள் மூலம் 1894 ஆம் ஆண்டு குடியிருக்க வீட்டுப் பட்டாக்களும், விவசாயம் செய்வதற்கு நிலங்களும், குழந்தைகளுக்கு கல்வி வசதியும் பெற்றுத் தந்தார்.மேலும் , ஆங்கில அரசு காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்த முன்னோடியாகவும்  விளங்கினார். மக்களோடு இருந்து பணிசெய்ததன் சாட்சியாக ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டலாம்.1895 ஆம் ஆண்டு சென்னை வந்த ஆங்கில அதிகாரி வைஸ்ராய்  லார்டு எல்சின் என்பவரிடம் மனுக் கொடுப்பதற்காக் மக்களைத் திரட்டியவர், அவர்களோடு ஊர்வலமாகச சென்றார். இன்றைய கால ஊர்வலங்களின் போது தலைவர்கள் மக்களுக்கு அப்பாற்பட்டு வாகனத்தில் வருவதை ஒப்பிட்டுப் பார்த்து அவருடைய மக்கள் நெருக்கத்தை உணரலாம்.
                                 மேலும்,அதே 1895 ஆம் ஆண்டு அக்.5 ஆம் ஆண்டு வெளிவந்த பறையன் இதழில் தலித்துகளுக்கு நிலம் ஒதுக்கவில்லை என்பது குறித்து எழுதினர்.மதுரை மாவட்ட ஆட்சியரும், வட்டாட்சியரும் புறம்போக்கு நிலங்களை பறையர் சமூகத்திற்கு வழங்கவேண்டுமென்ற அரசாங்க உத்தரவு மதுரை மாவட்டத்திற்கு பொருந்தாது என்று கூறி நிலம் கொடுக்காமல் ஓரவஞ்சனை செய்வதாகவும், நிலம்கேட்டு அளித்த விண்ணப்பங்களை நிராகரித்ததாகவும் கூறினார். மேலும், புதுப்பட்டி கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தை ஒரு பிராமணருக்கு ஒதுக்கியதை சுட்டிக் காட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் பிராமணர்களே அதிகாரிகளாக இருப்பதால்தான்  பறையர்களுக்கு ஒரு துண்டு நிலம்கூட ஒதுக்கவில்லை என்றும் எழுதினார்..
                              இந்நிலையில், 1896 ஆம் ஆண்டு அக்.ஏழாம் நாள் சென்னை விக்டோரியா அரங்கில் மக்கள் மாநாட்டைக் கூட்டியவர் ஒடுக்கப் பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதாரம்,பண்பாடு குறித்துப் பேசினார். அதுகுறித்து பல செயல் திட்டங்களை வகுத்தார். ஆனால், திட்டங்கள் நிறைவேறத் தேவையான நிதிதேடி லண்டன் நோக்கி கப்பலில் பயணமானார்.செல்லும் வழியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதனால் தென்னாப்பிரிக்காவில் இறக்கிவிடப்பட்டார். அங்கேயே நேட்டால் என்ற இடத்தில தங்கி நீதிமன்ற மொழிப்பெயர்ப்பாளராக பணியாற்றினார். இந்த பணி நாட்களின்போதுதான் காந்தியுடன் நண்பரானார். தென்னாப்பிரிக்காவின் பீனிக்ஸ் என்னுமிடத்தில் காந்தியைக் கண்டதாகக் கூறுகிறார். காந்திக்கு தமிழில் பெயர் எழுதக் கற்றுக் கொடுத்தார். ஆப்பிரிக்காவில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி, மீண்டும் பறையன் இதழைத் தொடங்கினார். (எஸ்.கே.அந்தோணி பால் என்பவற்றின் குறிப்பு இப்படிச் சொன்னாலும் ரவிக்குமார் அவர்களின் தொகுப்பில் 1897 ஆம் ஆண்டு வெளிவந்த 'பறையன்' இதழ்ச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆக அவர் வெளி நாட்டில் இருந்தபோதும் பத்திரிகை நடத்தியிருக்க வேண்டும்)
                                    1922 களில் நீதிக் கட்சியில் இணைந்தவர், 1923 முதல் 1938  வரை பதினைந்து ஆண்டுகள் சட்டப் பேரவையில் நியமன உறுப்பினராக இருந்தார். அனைத்து மக்களுடனும் சாலைகளில் சமமாக நடக்கவும், பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்கவுமான சுதந்திரம் கொடுக்கும் சட்டத்தை 1925 ஆம் ஆண்டு ஆங்கில அரசிடமிருந்து  ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுத்தந்தார். மேலும், ஒடுக்கப்பட்டவர்கள்  மீட்சிபெற சென்னையில் 'ஐக்கிய மகா சபை' எனும் அமைப்பை 1928 ஆம் ஆண்டு நிறுவி அதன் தலைவராகவும் விளங்கினார்.
                                    லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு புரட்சியாளர் அம்பேத்கருடன்  சென்றவர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை அதிர்ச்சியடையச் செய்தார். இங்கிலாந்து அரசர் கைகுலுக்க வந்தபோது கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டு கைகுலுக்குவதிலிருந்து விலகி 'நான் தீண்டத்தகாதவன்' என்று கத்தினார். அவையிலிருந்த அனைவரும் அதிர்ந்தனர். அரசர் தத்தாவை தழுவி அணைத்துக்கொண்டார். தாத்தா அணிந்திருந்த  'பறையன்' என்ற அடையாள அட்டையை நெஞ்சோடு உரசினார். இந்நிகழ்வு அம்பேத்கருடன் அவர் வைத்த இரட்டை வாக்குரிமை கோரிக்கை ஏற்கப்பட உதவியது. இவ்வரலாற்று நிகழ்வு 1930 ஆம் ஆண்டு நடந்தேறியது.
                                            ஆனால், இரட்டை வாக்குரிமை வழங்குவதை எதிர்த்து காந்தி உண்ணாமல் இருந்தார்.ஒடுக்கப் பட்ட மக்களுக்கு தனித் தொகுதி வழங்குவதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்ததை வீரத் தன்மையற்ற செயல் என்று கூறியதோடு, நேருக்கு நேர் நின்று வாதாடாமல் உண்ணாமல் இருக்கும் கோழை என்று காந்தியைக் குறிப்பிட்டார். அச்சூழ்நிலையில் ஒடுக்கப் பட்ட மக்கள்மீது நடத்தப் பட்ட கொலை,பாலியல் வன்முறை ஆகியவை பெருகியது. அதனால், வேறு வழியில்லாமல் தலித்துகளின் அன்றையப் பாதுகாப்புக் கருதி அம்பேத்கருடன் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது ஒரு வரலாற்றின் கருப்பு நிகழ்வாக அமைந்தது. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு காந்தி செய்த துரோகம் மன்னிக்கமுடியாததாக அமைந்தது.
                                          அவருடைய மைத்துனன் அயோத்திதாசர் ' தமிழன்' என்று சாதியை ஒழிப்பதற்காக மொழியின்வழி அடையாள படுத்தப் பட்ட பத்திரிகை துவங்கியதற்கு மாறாக, சாதியின் பெயரிலேயே 'பறையன்' என்று பத்திரிகை துவங்கினார். எனை எந்தப் பெயரைச்  சொல்லித் தாழ்த்துகிறாயோ அந்தப் பெயர்கொண்டே மீண்டேழுவேன் என்றவாறு அவரது போர்க்குணம் அமைந்தது. அயோத்திதாசர் 'திராவிட மகாஜன சபை' என்று துவங்கியபோது இவர் 'பறையர் மகாஜன சபையை' நிறுவினார். விடுதலையின் செயல் வடிவத்தில் இவ்வாறு தனித்த போக்குகளைக் கொண்டிருந்த தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கரின் கண்ட வழிமுறையிலும்  முரண்பட்டு நின்றார். புத்த மதம் மாறினால்  சாதிக் கொடுமைகளுக்கு முடிவுகட்டலாம் என அம்பேத்கர் உரைத்த பொழுது, அதில் தீர்வுகிடைக்கது என்று ஆணித்தரமாகக் கூறினார் தாத்தா. அவர் கூறியது போலவே இன்றும் புத்த மதத்திற்கு மாறிய தலித்துகளின் நிலையில் மாற்றமில்லை.
                                      இவ்வாறான தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்த தாத்தா 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் -27 ஆம் நாள்  உருவாக்கப்பட்ட  செட்யூல்டு இன புரோவின்சியல் அட்வைசரிப் போர்டுக்கு  ஆலோசகராக விளங்கினார். இவ்வாறு தொடர்ந்து மக்கள் பணி செய்த அவருக்கு ஆங்கில அரசு 1926  ஆம் ஆண்டு ராவ் சாகிப், 1930  ஆம் ஆண்டு ராவ் பகதூர், 1936 ஆம் ஆண்டு திவான் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கியது.  1940 ஆம் ஆண்டு திராவிட மணி என்ற பட்டம் தமிழ் தென்றல் திரு.வி.க. முன்னிலையில் வழங்கப்பட்டது. அந்நிகழ்வுக்கு இராஜாஜி தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
                                         ஓயாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை தேடி ஒடிய மாவீரன் இரெட்டைமலை சீனிவாசன் 1945  ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் (இயற்கை எய்தினார்). அவரின் பிறந்த நாள் இன்று. சாதியை ஒழிக்க சபதமேற்போம்.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

குழந்தைகள் மீதான வன்முறை -தமிழ்முதல்வன்

குழந்தைகள்  மீதான வன்முறை -தமிழ்முதல்வன்  
                         ண்மையில்  கோவையில் சந்தித்த (24-06-2010) அஜயன் பாலா அவர்களும், முக நூலில் (face book) சந்தித்த ஞான பாரதி அவர்களும் 'எப்ப சென்னை வருவீங்க?' எனக் கேட்டனர்.  எனக்குச் சென்னை என்றாலே ஒரு பயம் தொற்றிக் கொள்ளும். மிகவும் அவசியமேற்படும் பொழுது சென்னை செல்லும்போதெல்லாம் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டுதான் செல்வேன். ஏனெனில் மதுரையை விடவும் சென்னை அவலம் மிகுந்த நகரமாக எனக்குக் காணப்படுகிறது. சென்னை செல்லும் போதெல்லாம் கட்டிடங்கள், வாகனங்கள், கட்டிளம் நங்கையர்கள், பகுமான மனிதர்கள், பணக்காரத் தோற்றங்கள் இவையெல்லாவற்றையும்  விட  என்கண்ணில் ஏழைகளே தென்படுகின்றனர். அன்றாட உணவுக்கு அல்லாடும் தெருவோர வாசிகள் நிலைமையே தென்படுகிறது. சென்னையில் காலடி எடுத்து வைக்கும் நேரமேல்லாமே அதிகாலை பொழுதாக அமைவதால்,  செல்லும் வழிகளில், சாலையோர நடை பாதைகளில் விரித்த துணிகளும் விலகிக் கிடக்க வெற்றுத் தரையில் படுத்து உறங்கும் அப்பாவிகளின் நிலைமை காலையிலேயே கவலையைத் தந்துவிடும். அதிலும் அந்த அப்பாவிகளின் நடுவில் தூங்கும், ஒருசில இடங்களில் பெற்றோரை விட்டு புரண்டு புரண்டு விலகிப் போய் தனியாக அனாதையாக தூங்கிக் கிடக்கின்ற குழந்தைகளின் காட்சி இதயத்துடிப்பைக் கூட்டிவிடும். அக்குழந்தைகளின்மேல்  படிந்துள்ள சிங்காரச் சென்னையின் தூசிகளும், அழுக்குகளும் அவர்களின் வாழ்வில் படிந்துள்ள துன்பத்தைப் போல சுமையாக அமுக்கிக் கிடக்கும்.  காலை வெயிலில் காய்ந்த சருகுகள் போல, சோர்வாகக் கிடக்கும் அவர்களின் நிலை  சென்னையில் நான் செய்ய வேண்டிய பணிகளில் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கும்.
                                              மலை, காடு, வயல் போன்ற பகுதிகளில் இயற்கை சார்ந்து வாழமட்டுமே பழகிய, அரசாங்கத்தாலும், அதன் துணைகொண்டு தனியார் நிறுவனங்களாலும் விரட்டப் படும் பழங்குடிகள் மற்றும் தொல்குடிகள் (தலித்துகள்) பெரு நகரங்களுக்குத்தான் ஓட வேண்டியிருக்கிறது. அச்சூழலில், அறிவியலின் நவீனத் தன்மையோடும், அதன் அகால ஓட்டத்தோடும் பிணைக்கப் பட்டு சக மனிதரை மயக்கும் அதி தொழில்நுட்பமிகுந்த போலிப் புன்னகைகள் போன்ற இதர உடல் மொழிகள் மற்றும் வெளிப்பாடுகளுடன் அலைகின்ற நகரத்து மக்களோடு போட்டியிட முடியாமல் அவர்களால் துவைக்கும் துணியைப் போன்று அடித்துத் தூக்கி வீசப் படுகின்றனர். ஒரிசாவின் பழங்குடி மக்களின் தலைவர், 'எங்கள் வாழ்க்கைமுறை நகரங்களில் கிடையாதாகையால் நாங்கள் அழிந்து விடுவோம்' என்று அச்சம் பொங்கக் கூறுவதை இங்கு சுட்டிக் காட்டலாம்.   புதைகுழிக்குள் தள்ளப்பட்டதுபோல்  நகரங்களுக்குள் ஒருவேளைச் சோற்றுக்காக அலையும் வேதனைகள் சொல்லித் தீராது கிடக்கின்றன. அவர்களின் குழந்தைகள் பசியின் வேதனையில் அழுகும்போது அந்த மூலதனத்தையே முதலீடாக்கி பிச்சை எடுக்கிறார்கள். அழுதபிள்ளை பால் குடிக்கும் என்ற பழ மொழி அழுத பிள்ளை காசு பெறுகிறது என்றவாறு புது மொழியாகிவிட்டது. இயலாமையால்  நேரும் இந்தச் சூழல், சில வன்மனதுக்காரர்களுக்கு சாதகமாகி விடுகிறது. அதே குழந்தைகளை வாடகைக்கு எடுத்து காசு பொறுக்கும் எந்திரமாக மாற்றி விடுகின்றனர்.
                                                 என் வாழ்க்கையில் என்னைத் தூங்கவிடாமல் செய்யும் சம்பவங்கள் என்றால் ஒன்று விபத்துக் காட்சி. இரத்தமும் பிய்ந்துபோன சதையுமாகக் கிடக்கும் உடல்களைப் பார்த்துவிட்டால் ஒரு மாதம் வரை நிம்மதியான தூக்கம் இராது. அண்மையில் இணையத்தின் வழியாக பார்த்த காட்சி ஒன்று அதைவிடவும் எனை வருத்தியது. தமிழ் இளைஞர்களை வரிசையாக முழங்காலிட்டு வைத்து அவர்களின் தலையில் சிங்களச் சிப்பாய்கள் சுட்டுத் தள்ளும் காட்சியது. இரத்தமும் சதையுமாக  அழுத்தி வருந்தவைக்கும் அக்காட்சிகளுக்கு இணையானதாக மறக்கமுடியாத கொடுமையாக பாதிக்கும் மற்றொன்று குழந்தைகள் மீதான வன்முறை.
                                                   போலித் தாய்மார்கள்  கடைவாயில்களிலும், உணவுவிடுதி வாயில்களிலும், கோயில் வாயில்களிலும் நின்றுகொண்டு பசியால் ஏற்கனவே மயக்கமுற்று தோளிலும், உடல்மீது தொங்கும் தொட்டியிலும் கிடக்கும் வாடகைக் குழந்தைகளை பிஞ்சுச் சதை கிழிய கிள்ளியும் , பிஞ்சுச் சதை வீங்க அடிப்பதுமான காட்சிகள் எனை மயக்கமுறச் செய்திருக்கின்றன. வலி தாங்கமுடியாமல் ஆதரிக்க ஆளில்லாமல் கதறும் குழந்தையைக் கண்ட ஒரு சூழலில் நான் அந்த போலித் தாயை கண்டித்த பொழுது ரவுடிகள் போன்ற கூட்டம் எனைச் சூழ்ந்துகொண்டது. சக மனிதர்கள் வேடிக்கை பார்த்துவிட்டு இது இவனுக்கு வேண்டாத வேலையென்று ஒதுங்கிப் போய்விட்டனர். ஒரு சிலரோ 'அது அப்படிதான் நடக்குது தம்பி, நம்ம என்ன பண்றது' என்று எனக்கு அறிவுரைசொல்லிப் போகிறார்கள். நான் இச்சமூகத்தை நினைத்து அதிர்ச்சியடைந்து, அந்தக் குழந்தைகளின் ஆதரவற்ற மனநிலைகளை, உடல் வலிகளை எண்ணி நானாக அழுதிருக்கிறேன். புலம்பியிருக்கிறேன். இப்பொழுதும்  என்மனநிலை  அக்குழந்தைகளுக்கு  ஆதரவாக, அதுவும் அவர்கள் அறியாவிதத்தில், நேரடியாக உதவாநிலையில் அலைந்துகொண்டிருக்கிறது. இந்த அவலங்களைக் காணும் சக மனிதர்கள் நேரடியாக அப்போலி தாய்மார்களை குற்றம் சாட்டிவிட்டு அவர்களும் உள்ளிட்ட இச்சமூகத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அல்லது அவர்களுக்கு தங்களும் இந்நிலைக்கு ஒரு காரணம் என்பதே தெரியவில்லை.
                                                வன்மையான சமூகம் ஈன்று போட்ட பாமர ஏழைப் போலித் தாய்களின் இக்கொடுமைகளுக்கு  சற்றும் குறைவில்லாமல் படித்த நாகரிக பெற்றோரே ஒரு குழந்தையை அடிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். வறுமை எனை திருப்பூருக்குத் தள்ளிய போது, அங்கு நான் குடியேறிய  வளாகத்திற்குள் குடியிருந்த ஒருவன் , நாகரிக நடை உடை கொண்டவன். கல்லூரிப் படிப்புகளை முடித்தவன்.மனைவிமீது கோபம் கொண்டாலும்கூட குழந்தையை அடித்துத் துவைப்பான்.அதுவும் அவனது அடித்தல் முறை காவல் நிலையங்களில் கயிற்றில் கட்டி அடிப்பதைப் போன்று இருக்கும்.ஒருகையில் குழந்தையின் கைகளிரண்டையும் பிடித்துத் தூக்கிக் கொண்டு அந்தரத்தில் தொங்கவிட்டு மற்றொரு கையால் கோபம் தீரும் வரை அடிப்பான். எண்பது கிலோ எடை கொண்ட உடம்பின் வலு வன்மையாக எட்டு கிலோஎடைகொண்ட   உடல்மீது தாக்கும்போது  அந்த வலியைநினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.. அதுபோல் அவனுடைய மனைவியும் கையில் கிடைத்த கரண்டி உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு அடிப்பாள். இப்படி  அடிவாங்கியே நான்கு வயதுக் குழந்தை இரண்டு வயதே ஆனது போன்று வளர்ச்சியற்று சோர்வாகவே காணப்பட்டது. நான் உள்ளிட்ட வளாகத்தில் குடியிருந்த அதனை பேரின் கண்டிப்புகளைத் தாங்க முடியாமல் வேறொரு இடத்திற்கு குடி பெயர்ந்து விட்டான். அந்தக் குழந்தையை அடிக்கும் காட்சிகள் மட்டும் இன்றும் நினைவில் தொடருகின்றன.
                                                          மேலும் திருப்பூரின் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் அநாதை போலவே வாழ்கின்றனர். வீட்டிலுள்ள பெரியவர்களெல்லாம் வேலை செய்தால்தான் பிழைப்பு நடத்த முடியும் என்பதால் குழந்தைகள் தனியாகவே விடப்படுகின்றனர். அங்கு குழந்தைகளைப் பாதுகாக்கும் எந்த ஒரு சூழலும் இல்லை. அங்குள்ள நிறுவனங்களில் வேலை நேரம் காலை எட்டரை மணிக்கே தொடங்கி விடுவதால் ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு பெற்றோர் கிளம்பி விடுகின்றனர்.பள்ளிசெல்லா குழந்தைகள் அடைபட்ட வீட்டினுள் முடங்கிக் கிடப்பதும், பள்ளி செல்லும் குழந்தைகளை அதற்குத் தயார்ப்படுத்த ஆளின்றி ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்வதாயும் இருக்கின்றனர்.. இப்படியே படிப்பில் ஆர்வம் குறைந்து இடை நிற்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிடுகின்றனர். பணியிடங்களில் வேலைப் பளு இருண்ட உலகத்தில் அவர்களைத் தள்ளுகிறது. மேலும், அங்கு ஆண் பெண் என்று  பாராமல் குழந்தைகள் அனைவரும் பாலியல் கொடுமைகளுக்கும் உள்ளாகின்றனர்.இவைகளில் பெரும்பாலானவை தலித் குழந்தைகளே என்பது குறிப்பிடத் தக்கது.  இப்படியான வன்முறைகளால் கருவுற்றுப் பிறக்கும் சிசுக்கள் குப்பைத் தொட்டிகளிலும் கழிவுநீர் வாய்க்கால்களிலும்  பிணமாகி விடுகின்றன.மேலும் பல சிசுக்கள் பிறக்கும் முன்பே கருவறைக்குள்ளிருந்து வெளியே வீசப் படுகின்றன.உலக அளவில் பார்த்தால் யூனிசெபின் கணக்குப்படி ஒன்றரைக் கோடிக் குழந்தைகள் முதலாவது பிறந்த நாளுக்கு முன்பு இறந்து விடுகின்றன. ஆனால் இந்தக் கணக்கில் திருப்பூர் போன்ற தொழில் பெருத்த நகரங்களில் நசுங்கிய குழந்தைகளின் எண்ணிக்கை விடுபட்டிருக்கலாம்.
                                       திருப்பூரில் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வரை நான்கு சுவர்களுக்குள்ளேயே குழந்தைகள் முடக்கப்படும்போழுது மன பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  இறுகிய அழுத்தமான மனநிலையிலிருந்து விடுபட சிறு வயதிலேயே புகை, மது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.பனியன் நிறுவனங்களில் துணி வெட்டும் பொழுது வரும் தூசிகள், துணிகளில் கரை நீக்கப் பயன் படும் வேதி அமிலங்கள் போன்ற  இன்னபிற உடலை கேடு செய்யும்  சூழல்களில்தான் அவர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் குட்டிஜப்பான் என்றழைக்கப்படும்  சிவகாசியிலும் குழந்தைகள் அபாயகரமான  இரசாயன கலவைகளோடு பணிபுரிகின்றனர். இப்படியாக குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகையில், இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில இருக்கிறது. ஆந்திரம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த அறிக்கை 2005 எடுக்கப்பட்டது.
                                           தொழில் நகரங்களைக் காட்டிலும் சொற்பக் கடனுக்காக செங்கல் சூளைகளிலும் கட்டிட வேலைகளிலும் மிகவும் கடினமான பணியை குழந்தைகள் செய்துவருவது மிகவும் கவலைக்குரியது.  மேலும், பெரும் பண்ணைகளிலும், அரிசி அரவை நிலையங்களிலும் தூசுகளை  சுவாசித்துக்கொண்டே பணிபுரிகின்றனர். குழந்தைகள் கடினமான அபாயகரமான வேலைகளை இந்தியா  முழுவதிலும் செய்து வருவதற்கு பெரும் சாட்சியாக விளங்குவது உ.பி.யிலுள்ள பிரோசாபாத் கண்ணாடித் தொழிற்சாலை. ' ல பியாஸ்' எனப்படும் கைப்பிடி இல்லாத  , நான்கடி நீளமுள்ள இரும்புக் கம்பிகளின் முனையில் அடைக்கப் பட்டுள்ள எரியும் கண்ணாடிக் கூழ் கொண்ட களிமண் கலவையை குழந்தைத் தொழிலாளர்கள் சுமப்பதாக பேரா. சந்திரா கூறுகிறார். அங்குள்ள எரியுலைகள்  1800 டிகிரி வரை வெப்பம் உள்ளதாக அவர் கூறுகிறார். அங்கு பணிபுரியும் எழுபதாயிரம் தொழிலாளர்களில் பதிமூன்று சதவீதம் பேர் குழந்தைகள் என்று அம்மாநில அரசே ஒப்புக் கொள்கிறது.மேலும் கல்குவாரிகளில் கல் உடைக்கவும் , சுமக்கவுமான வேலைகளை செய்யும் குழந்தைகள்  எலும்புகள் ஒடிய பாடுபடுகின்றனர்.
                               திண்டுக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகளில் வேலை செய்ய பெண்குழந்தைகளே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  அதிகாரிகளிடம் காட்டுவதற்காக குழந்தைகளுக்கு சேலைகட்டிவிட்டு பெரியவளாக போலியான அடையாளம் காட்டுகின்றனர். திருமணத்திட்டம் என்ற பெயரில் ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கிவிட்டு இறுதியில் சொற்பத் தொகையைக் கொடுத்ததும் , சில நேரங்களில் அதையும் தராமல் தவிக்க விடுகின்றனர். இவ்வாறு ஏமாறும், சுரண்டப்படும் பெண்குழந்தைகள் பெரும்பாலும் தலித்துகளாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு நிகழும் பாலியல் கொடுமைகள் வெளிதெரியாமல் மறைக்கபடுகின்றன. இப்படியாக , இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு ஏழு லட்சம் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
                                   கிராமப் புறங்களில் சாதி ஆதிக்கவாதிகளிடம் , மிக எளிதில்  தலித் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்.  சாதியாதிக்கவாதிகளையே சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெற்றோரும் எதிர்க்கத் திராணியற்று விடுவதால், கொடுமைப்படும் குழந்தைகள் மன பாதிப்புக்குள்ளாகி பின்னாளில்  வயதுக்கு வருமுன்பே பாலியல் தொழிலுக்கு வந்துவிடுகிறார்கள். பாலியல் தொழில் புரியும் பெண்களில் பதினைந்து சதவீதம் பேர் இப்படியான பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர். குறிப்பாக , துளிர் எனும் அமைப்பு 2006 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள 2211 குழந்தைகளிடம் ஆய்வுசெய்தபோது 42 சதவீதம் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கண்டுபிடித்துள்ளது.
                    ஊடகத்தின் தாக்கத்தினாலும், விரைந்து தாக்கும் வரன்முறையற்ற பன்னாட்டு பழக்கவழக்கங்களாலும்  காமவெறி கொண்டு தம் குடும்பக் குழந்தைகளிடமே பாலியல் வன்முறை செய்யும் மிருகங்களும் மனிதன் என்ற உருவத்தில் அலைகின்றன. சாக்சி எனும் நிறுவனம் டெல்லியிலுள்ள 350  குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் 63 சதவீதம் பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.
                                                   மேலும் குழந்தைகளை பெரியவளாக்கிப் பார்க்கத் துடிக்கும் பெற்றோர்கள் அதன் மழலைத் தன்மையை தடுத்து, ஒருவித அழுத்தத்தை திணித்து விரக்தியை உண்டாக்குகின்றனர். விஜய் தொலைக் காட்சியில் சிறுவர்களுக்கான நடனப் போட்டியில் ஆடும் குழந்தைகள், சினிமாப் படங்களில் காதலர் இருவர் தன்னுடைய பாலுணர்வை வெளிப்படுத்த மேற்கொள்ளும் அசைவு நளினங்கள் (அந்த உணர்வு குறித்து ஏதும் அறியாமல் இருக்கும் வயதில், பாலின உந்துநீர்கள் சுரக்கும் முன்னரே ) ஆகியவற்றை செய்திட நிர்பந்திக்கப் படுகின்றனர். குழந்தைகளிடத்தில் இவ்வாறு தெரியாமல் வெள்ளிப்படும் பால்வேட்கை உந்து அசைவுகள் காமுகர்களை ஈர்த்து, குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. இவ்வாறான நிலையில் ஊடகங்களும் குழந்தைகளின் கொடுமைகளுக்கு துணைபுரிகின்றன. இவ்வாறு நடக்கும் கொடுமைகள் நகரங்களில் வெளியே தெரிகின்றன. கிராமங்களில் நடக்கும் குழந்தைகள் மீதான கொடுமைகள் அங்குள்ள கட்டப் பஞ்சாயத்துக்குக் கூட வருவதில்லையாதலால் மறைக்கப் படுகின்றன.
                                     செல்பேசியில் மணிக்கொருமுறை பார்த்து மகிழும்படியான பாலுறவுப் படங்களுடன் அலையும் இளைஞர்கள் , தான்கொண்ட வக்கிரத்தை எளிதில் தீர்த்துக் கொள்ள , எதிர்ப்பும் வலுவும் குறைவான குழந்தைகளையே நாடுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு நேரும் கொடுமைகளுக்குச் சாட்சியாக அக்குழந்தைகளின் உடலமைப்பே இருந்துவிடுகின்றன. ஆனால், ஆண்குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு சாட்சியங்கள் உடலில்  தென்படுவதில்லை. இப்படியான நிலையில் சம்வாதா எனும் அமைப்பு பெங்களூரில் 1996 ஆம் ஆண்டு மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் 47 சதவீதம் பேர் பாலியல் கொடுமைக்கு உள்ளாயினர் என்று வசந்தி தேவி (காலச்சுவடு-90)கூறுகிறார். மேலும் 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறை, குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து பதிமூன்று மாநிலங்களில் 12 ,447  குழந்தைகளிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 53 சதவீதம் பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாக , அதிலும் 21 .9  சதவீதம் பேர் மோசமான பாலியல் கொடுமைக்கு உள்ளானதாகவும் தெரியவந்தது.இதில் இருபால் குழந்தைகளும் சரிசமமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இவ்வாறான பாலியல் கொடுமை புரிவதற்கு கோவாவின் கடற்கரைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் குழந்தைகளைத் தேடி வெள்ளையர்கள் வருவதாக பத்திரிகைகள் (புதிய கலாசாரம்-அக்-2008 ) சொல்கின்றன. இதற்காக குழந்தைக் கடத்தல்களும் நடக்கின்றன.கடத்தப்படும் குழந்தைகள் விற்கப்படுகின்றன. வங்காள தேசத்தில் பத்து முதல் பனிரெண்டு வயது வரையிலான சிறுவர்களை இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிவிடலாம் என்று ராஜூ சக்பால் என்ற தரகன் சொன்னதாக யோ.திருவள்ளுவர் கூறுகிறார்.
                          மேலும், மழலைகளும் விற்பனை செய்யப்பட்டு அரபு நாடுகளில் ஒட்டகப் பந்தய ஓட்டிகளாக பயன்படுத்தப் படுவதாகவும் கூறுகிறார். ஐக்கிய அரபு எமிரேட்டின் துணை அதிபர் சேக் முகமது பின் ரசீத் அல்மக்தோம்  அவரது சகோதரருடன் சேர்ந்து 30,000  குழந்தைகளை ஒட்டக ஓட்டும் அடிமைகளாக வைத்திருததாக அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.  இப்படி விற்கப்படும் குழந்தைகள்  சூடான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் என அறியப்படுகிறது. தமிழக அளவில் பெரும்பாலான தலித் குழந்தைகள் பிற மாநிலங்களுக்கு முறுக்குப் போடுதல் போன்ற பணிகளுக்காக  விற்கப்படுவதுபோல் கொத்தடிமைகளாக பெற்றோர்களாலேயே அனுப்பப்படுகின்றனர். அக்குழந்தைகளை வாங்கும் ஏஜெண்டுகள் ஊர்ஊராக அலைந்து வறுமையின் பிடியிலுள்ள குடும்பங்களைத் தேடி கடன் வழங்கி குழந்தைகளைக் கடத்துகின்றனர்.
                                இவ்வாறாக குழந்தைகள் மீது உடல்ரீதியாக வன்முறைகள் திணிக்கப் படுகின்றன.மேலும், புறக்கணிப்பு, அவமதிப்பு போன்ற செயல்களால் உணர்வு ரீதியாக குழந்தைகள்  வன்கொடுமைகளுக்கு உள்ளாவதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். அந்தச் செய்திகளைத்  தாங்கவும் நெஞ்சத்தை தயாராய் வைத்திருப்போம்.