வெள்ளி, 18 ஜூன், 2010

தாய் மொழியே அடையாளம்

         தமிழ் " செம்மொழி " என உறுதி படுத்தப்பட்ட  நிலையில், அதைக் கொண்டாடும்  தமிழக அரசு சில வேலைகளைச செய்தால் மட்டுமே, கொண்டாட்டம் முழுமையும் செழுமையும் அடையும்.    இல்லையெனில் விளம்பரமாக மட்டுமே  முடிந்து போகும்.
                                                       னக்குள் பொதிந்துள்ள ஆற்றலை வெளிப்படுத்தி மானுடக் கூடத்தின் பார்வையை ஈர்க்கும் வெற்றியின் அடையாளமே ஒவ்வொருவரும் அடையத் துடிப்பது. உடல் வலிமையின் மூலமே ஆதிகாலத்தில் தன்னை அடையாள படுத்திய மனிதர் , பிறகு எண்ணத்தையும் எழுத்தையும்  கொண்டு அடையாளம் பெற்று வருகின்றனர். இதையே புகழ் பெற்ற பிரஞ்சு தத்துவ இயலாளர் டெகாத், 'நான் சிந்திக்கிறேன். எனவே நான் இருக்கிறேன்' என்றார்.
                                                     சிந்தனை என்பது ஆய்வு . ஆய்வு என்பது மொழி+அறிவு புரியும் வினை. வினையின் விளைவு படைப்பு. அது இலக்கியமாகலாம்; தலைமையாகலாம்; இயந்திரமாகலாம்;தொழில் நுட்பமாகலாம். ஆக, படைப்பாற்றலே அடையாளம் பெற உதவுகிறது. கற்பதையும் கேட்பதையும் அதுபோல வெளிப்படுத்துவது  நகல்.  ஆனால், அதைக் கொண்டு எண்ணத்தின் வழியே புதியதொன்றை உருவாக்குவது படைப்பு. ஆக, படைப்புக்குத் தேவை சிந்தனை. சிந்தனைக்குத் தேவை மொழி. மேலும் தேடல், தொகுத்தல், ஒப்பிடுதல், வரையறுத்தல் போன்ற நேர்த்தியான நெறிகளுக்கு மொழிதான் வழி. இப்படியான இயங்கியலுக்கு பிறமொழியைக் காட்டிலும் தாய்மொழியே சிறப்பாக உதவ முடியும். ஆகவே தாய்மொழிதான் அடையாளத்தைப் பெற்றுத் தருகிறது.
                                      தமிழர் தொன்மையில்  மிகச் சிறந்த அடையாளத்தைப் பெற்று விளங்கினர். உலகப் பொதுமறை திருக்குறள் அதற்குச் சான்று. ஆனால், அண்மைக் காலமாக தமிழர் அடையாளமிழந்து வருகின்றனர். தன்னையே மறந்து வேறு ஒன்றாய்க் கிடக்கின்றனர். தாய்மொழியைத் தாழ்த்தி பிறமொழியை உயர்த்துகின்றனர். தனித் தமிழ் வழியில், தமிழர் தனித்து நின்றபோது கொண்டிருந்த பண்புகளிலிருந்து பிறமொழிக் கலப்பால் வழுக்கி விழுந்தனர். தமிழும் சிதைந்தது.
                                        இதைப் பெரியார் அவர்கள் ' மதத்திற்கு ஆதாரமாய் இருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களேயொழிய ,, தமிழ்மொழி நூல்களால் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பது இங்கு கவனிக்கத் தக்கது. தமிழிலிருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலேயே நமக்கு பழந்தமிழ் கிடைத்து விடும்'   என்று ஆய்ந்து கூறுகிறார்.அதன்படியே, அவரின் வழியே திராவிட இயக்கங்களும் வடமொழியை எதிர்த்து நின்றன. அப்படியே பழந்தமிழ்ப் பண்புகளைப் பாதுகாத்து, மேலும் செறிவூட்டி, அரிய பெரிய  கருத்துக்களையும், ஆய்வுகளையும் நுட்பங்களையும் தமிழில் படைத்து நிற்கவும், அதற்கு துணை நிற்கவும் , தூண்டுவதற்கும் மாறாக வடமொழிக்குப் பதிலாக ஆங்கிலத்தை நுழைக்கச்  செய்தன.
                                      ஆங்கிலமொழி நூல்களில் முன்னேற்றக் கருத்துகள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன எனக் கூறும் பெரியார் அவர்கள் அதற்கிணையாக தமிழிலும் நூல்கள் படைக்கப் பட வேண்டும் எனக் கூறுவதற்கு மாறாக, குழந்தைகளுக்கு தாய்ப் பாலில் ஆங்கிலத்தைக் கலந்து கொடுங்கள் என்று ஆங்கில வழிக் கல்விக்கு வழி வகுத்தார். ஏற்கனவே, வெள்ளைத் தோளில் உயர்வுப் பார்வை வீசியவர்களுக்கு ஆங்கிலமோகம் தலைக்கேற  இதுவும் ஒரு காரணமாயிற்று. ஆங்கிலத்தின் மூலமும் மூடநம்பிக்கைகள் மூச்சைப் பிடிக்குமென்று அவர் கருதவில்லை. அல்லது தமிழ் வழிக் கல்வியை அவர் வெறுத்தார்.
                                        விடுபட்ட விவரங்களை, செய்திகளை பிறமொழி வழியே அறிந்து கொண்டு தமிழராக தன்மொழி வழியே சிந்திப்பதை மறுத்து ஆங்கிலத்தில் படித்து அதிலேயே சிந்தித்து மேலை நாட்டுக்காரர்களாகவே தங்களை  வயப்படுத்தித தாழ்த்திக் கொண்டனர். மேற்கே எந்த ஒரு விளைவும் இங்கு வியப்பைத் தூண்டியதற்கும்,  நாற்றம் வீசும் சில மேலைப் பண்பாடு நறுமணமாய் இங்கு நுகரப் படுவதற்கும் ஆங்கில மொழியே முழு முதற் காரணமாகும். ஒருவரது மூளை முழுவதும் பரவியிருக்கும் பிரதிபலிப்பு நியூரான்கள் எதிரில் இருப்பவரின் உணர்வுகள், அசைவுகள் ஆகியவைகளை  தமது மூளையிலும் தூண்டி விட்டு எதிரிலிருப்பவரின் நகலாகவே அவரை ஆக்கும் என்பது சமூகம் சார்ந்த அறிவியல் துறையின் கண்டுபிடிப்பு.
                                          இதனூடாகக் கவனித்தால், ஆங்கிலமும் அது சார்ந்த அனைத்து ஆதிக்கமும் தீவிரமாக வெளிப்படும்போது அப்படியே ஏற்றுக் கொள்ளும் நரம்பியல் ஒத்திசைவு ஏற்படுகிறது. அனிச்சையாகவே அடிமைத்தனம் ஆட்கொள்ளப்படுகிறது. வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அமெரிக்க வல்லாதிக்கம் சீரழிக்கும்போது அதை அறிந்தும் அறியாமலும் கிடப்பதற்கு இதுவே காரணி
                                          அடிமை வாழ்வே ஆனந்தம் என்று நினைத்திருந்த இவ்விந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கிலமொழியறிவுதான் என்று கூறிய பெரியாரின் கருத்துக்கு மாறாக இன்று, ஆங்கில மொழியறிவே இவர்களை அடிமைகளாகவும் ஆகிவிட்டது.
                                         பகுத்தறிவாய்ந்த  பண்புத்துவம், தொன்றுதொட்டு விளங்கும் தொன்மைத்துவம், இதர மொழிகளின் தாய்மைத்துவம் குறித்து தமிழை உயர்த்திப் பிடித்த பெரியார் அவர்கள் தாய் மொழிக் கருத்தில் வேறுபட்டு நிற்கிறார்.   தாய் மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்  என்றார். ' நம் தாய் நம்மைப் பெற்றெடுத்ததும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ, துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழிதான் பேசுவோமே தவிர , நம் தாய் தமிழ்ப் பேசியதன் காரணமாக பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக  வெளிவருமா? '  என மேலும் அவர் தாய் மொழிக்கான பொருளுருவையே அறியவில்லை. தாய் மொழியை கருத்தாக மட்டுமே நினைத்தவர் பொருளாக நினைக்கவில்லை. அவரின் கருத்தின் வழியே திராவிட அரசுகள் ஆங்கில வழிப் பள்ளிகளை வளர்த்து விட்டன. இன்று அந்தப் பள்ளிகளின் ஆதிக்கம் தமிழைச் சிதைப்பதோடு அல்லாமல் தமிழ்க் குழந்தைகளின் எண்ணத்தையும் சிதைத்து வருகிறது. வெளிக்காட்ட முடியாத மன அழுத்தங்களுக்கு ஆங்கிலப் பள்ளிகளின் குழந்தைகள் இரையாகின்றனர். இந்த இடத்திலதான் தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்த  வேண்டியிருக்கிறது. காதால் கேட்டு, வாயால் பேசி, உள்ளதால் வாங்கிய பாடமே தாய் மொழி என்று புரிய வைக்க வேண்டியிருக்கிறது.
                                             கருக் குழந்தையின் மூளை அமைப்பு ஏழாவது மாதத்தில் முழுமையடைந்து அறிவைப் பெறும் ஆற்றலையும் பெறுகின்றது. தாயின் பேச்சொலி மூளையில் அதிர்வுகளாகப் பதிவாகின்றது. அதனால்தான் கருவுற்றவர்களை நல்லதைப் பேசவும், கேட்கவும் சொல்கிறது தமிழர் பண்பாடு. இவ்வாறு ஏழு முதல் பத்தாவது மாதம் வரை தாயின் மூலம், ஒலிகளைப் பதிவு செய்த குழந்தையின் மூளை, பிறந்த பின்பு வெளியில் கேட்கும் ஒலிகளை பதிவு செய்கிறது. பிறப்பிற்கு முன்னும் பின்னும் பதிவான, பதிவாகும் ஒலிகள் ஒன்றோடொன்று ஒன்றிப் போவதால் குழந்தையின் புரிந்துணர்வு திறன் வெகுவாக அதிகரிக்கின்றது. ஒலியும் ,( சைகை )  அசைவுகளும் தொடர்ந்து ஒன்றிணைவதால் குழந்தையின் புரிந்துணர்வும்  , அதனை வெளிப்படுத்தும் வேகமும் அதிகரித்து குழந்தை மழலை மொழி பேசுகிறது .  பள்ளியில் ஆசிரியரின் மொழி, பயிற்றுவிக்கும்  பாடம் ஆகியவை அதுவரை பழகிய தாய்மொழியாக இருந்தால், கருவறை முதற்கொண்டு உள்வாங்கிய ஒலி, அது உணர்த்தும் பொருள் ஆகியவை ஒத்துப் போகும் நிலை ஏற்பட்டு  எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. மாறாக, பதின்மப்  (மெட்ரிக்) பள்ளிகளைப் போல வேற்று மொழியில் கற்பிக்கப்படும் பொழுது அந்த வேற்றுமொழியின் ஒலியும் பொருளும் முன்னதாக மூளையில் பதிவான தாய்மொழியோடு ஒத்துப் போகாததால்  புரிதலின்றி திகைக்கின்றது. பொருள் அறியாமல் குழம்புகிறது. அதன் மூளையும் சோர்வடைகின்றது.. இது குழந்தையின் நினைவாற்றல் திறன்மீது ஏற்றப்படும் தேவையற்ற  சுமையாக அமைகிறது. இதனால், பாடத்தை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, உணர்ந்து உள்வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக வேற்று மொழியினை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் நகல் இயந்திரமாக குழந்தை மாறுகிறது.
                                       இந்த இடத்தில்தான்  தானாகச் சிந்திக்கும் ஆற்றலுக்கான அடித்தளம் மூளையில் தகர்க்கப்படுகிறது. இதன் மூலம் தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும் வரை தற்சிந்தனையில்லாமல் பிறர் சிந்தனையின் வழியே அடிமையாகி, எதிலும் சிறந்து விளங்க முடியாத நிலை ஏற்படுவதாக சொல்கிறார்  மணவை முஸ்தபா. மூளையிலுள்ள உணர்ச்சி  இயக்க அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையது தாய்மொழி மட்டுமே.ஒவ்வொரு  மொழியினரும் தனிப்பண்பாடும் மனப்பான்மையும் கொண்டு விளங்குவதற்கு அவர்களுடைய தாய்மொழியே காரணம் என்கிறார் ஜப்பானிய நரம்பியல் வல்லுநர் சுனோடா.
                                         இதனால்தான், உலகமுழுக்க தாய்மொழிக் கல்வி வலியுறுத்தப்பட்டு  நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தாய்மொழியே சிறந்தது என்பதினால்தான் இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு,ஜப்பான்,ரஷ்யா, சீனா முதலிய நாடுகள் உயரத்தில் நிற்கின்றன.அதனால்தான் தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்த பள்ளிகளை கர்நாடகம் தடையும் செய்தது.
                                          தமிழ் நாட்டில் கலைஞரின் அரசு இப்பொழுதான் தாய்மொழிக் கல்வியை முதல் வகுப்பிலிருந்து தொடங்கியுள்ளது. இந்தத் தொடக்கம் அனைத்து வகுப்புக்களிலும் நிறைவதற்குள் பல தலைமுறைகள் தாய்மொழி அறியாமலேயே வெளியேறிவிடும். அப்படித் தமிழேயறியாமல்  வெளியேறிய தலைமுறைகளின் குழந்தைகள் மேற்கண்ட ஆய்வுகளின்படி மீண்டும் தமிழ்வழியில் பயிலும்போது பல சோதனைகளைச் சந்திக்கலாம்.அதன்மூலம் தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வியே வலியுறுத்தும் சூழல் உருவாகும். தமிழ்வழிக் கல்வி புறக்கணிப்புக்கு உள்ளாகும். தொலைவில் நோக்கினால் , இவ்வாறு தமிழ் முற்றிலும் அழிவதற்கு இதுவே வழியாகலாம்.
                                          தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு, உடனடியாக தமிழ் வழிக் கல்வியை அனைத்து வகுப்புகளிலும் நடைமுறைப்படுத்தி தமிழை நிலைபெறச் செய்யவேண்டும்.பாடமொழியாக மட்டுமே இல்லாமல் பயிற்று மொழியாகவும் பயன்படுத்தும் பொழுதுதான் அது நிலைபெறும். ஒருமொழி எந்த அளவுக்கு பயிற்றுவிக்கப்படுகிறதோ அதைப் பொறுத்தே அம்மொழியின் வாழ்நிலை நீடித்திருக்கும் என்று ஆய்வுகள் சுட்டுகிறது. அடிப்படை முதல் ஆய்வுக் கல்வி வரையிலும்; அறிவியல், தொலைத்தொடர்பு, நிர்வாகம் போன்ற முன்னிலை வகிக்கும் துறைகளிலும் உடனடியாக தாய்மொழிக் கல்வி பயிற்றுவிக்கத் தேவையான சொற்களும் நூல்களும் உருவாக்கப்பட  வேண்டும். ஒவ்வொரு இயலிலும் உள்ள புதிய பரிமாணத்தையும் நுட்பத்தையும்  தொடுகின்ற தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்க வேண்டும்.அப்பொழுதுதான்   பயிற்றுமொழி நோக்கம் வெற்றியடையும்.
                                             உயர்நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை நடைமுறை படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் உண்ணாநிலை மேற்கொள்ளும் இந்த சமயத்திலாவது  அரசுதுரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் செம்மொழி மாநாடு வெற்று விளம்பரமாகவே முடிந்து போகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக